முதல் ஒன்பது பாகங்களில் கி.பி 30முதல் கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலத்துச் சபையையும், கி.பி 100முதல் கி.பி 312வரையிலான, அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரையிலான, ஆதிச் சபையையும் பார்த்தோம். பத்தாம் பாகத்தில் நாம் ஆரம்ப காலப் கிறிஸ்தவ பேரரசைப் பார்க்க ஆரம்பித்தோம். இந்தப் பதினோறாவது பாகத்தில், “ஆரம்பக் காலக் கிறிஸ்தவப் பேரரசை"த் தொடர்கிறோம். இந்தப் பாகத்தில், முக்கியமாக, தனியறைத்துறவறத்தின் (Monasticism) நன்மையையும் தீமையையும்பற்றிப் பார்க்கப்போகிறோம்.
கிறிஸ்தவப் பேரரசில் துறவறம், துறவிகள், துறவறமடங்கள் - ஒரு வரலாற்றுப் பார்வை
சபை வரலாறு - பாகம் 11
அன்பான பரிசுத்தவான்களே, சபை வரலாற்றின் பதினோறாம் பாகத்திற்கு நான் உங்களை அன்போடு வரவேற்கிறேன். இது ஒரு கதையல்ல, ஒரு வரலாறு. ஆனால், இது ஒரு சாமானியனின் வரலாறு அல்ல. இது தேவனுடைய வரலாறு, தேவனுடைய சபையின் வரலாறு.
இன்றைய தலைமுறை 5 அல்லது 10 நிமிடத்தில் மிகச் சுருக்கமான கதையைத் தேடுகிறது; நகைச்சுவை நிறைந்த மிக சுவாரசியமான கதையை நாடுகிறது. ஆனால், தேவனுடைய வரலாறு மிக நீளமானது, தூய்மையானது, ஆழமானது. அதை நான் 5 நிமிடத்தில் சொன்னால், நான் என் தேவனுக்குத் துரோகம்செய்கிறேன் என்று பொருள்; அதை நகைச்சுவையோடு சுவாரசியமாகச் சொன்னால், நான் தேவனுடைய இருதயத்தின் பாரத்தை நீர்த்துப்போகச்செய்கிறேன் என்று பொருள். நான் உழைக்கிறேன் - ஆனால், வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, தேவனுடைய பாரத்தை, பார்வையை, பரம மகாரியங்களை, தேவ மக்களின் இருதயங்களில் விதைக்க வேண்டும் என்பதற்காக.
சபை வரலாறு தேவனுடைய நித்தியத் திட்டத்தின் முக்கியமான அத்தியாயம். எனவே, இந்தப் பயணம் வெறும் பாடமோ, நினைவோ அல்ல; இது நம் விசுவாசத்தின் வேர். இது நம் முன்னோர் பயணித்த, தேவன் நடத்திய பாதை. இது நம் வரலாறு. நம் இருதயத்தில் எழுதப்படவேண்டிய வரலாறு. எனவே, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒருவேளை, விரும்பினால், வாஞ்சித்தால், சபை வரலாற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால், தமிழ் மட்டுமே தெரிந்த தேவ மக்கள் விரும்பினாலும், வாஞ்சித்தாலும் சபை வரலாற்றை அறிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அந்தக் குறைவை நிறைவாக்க நான் முயல்கிறேன். என் ஓட்டத்தையும், பிரயாசத்தையும் நித்தியம் தீர்க்கட்டும்.
வாருங்கள், இந்த வரலாற்று நதியில் ஒரு மணி நேரம் மூழ்குவோம்.
இந்தப் பாகத்தில் பின்வரும் காரியங்களைப் பார்க்கப்போகிறோம்.
1. முன்னுரை - சபை வரலாற்றின் காலகட்டங்கள்
2. உரோமப் பேரரசின் வீழ்ச்சி – ஒரு வரலாற்றுப் பின்னணி
3. உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்
4. துறவற இயக்கத்தின் நன்மைகள்
5. துறவற வாழ்க்கையின் உருவாக்கம்
6. துறவற வாழ்க்கையின் விசித்திர வடிவங்கள்
7. பெனடிக்ட்டும், அவருடைய துறவறமடத்தின் விதிமுறைகளும்
8. துறவற வாழ்க்கை - விமரிசனம்
9. துறவற ஞானம் – மேற்கோள்கள்
10. துறவற மடங்கள் – பயனும் பிழையும்
11. துறவறம் - நடைமுறைப் பயன்பாடுகள்
12. முடிவுரை
1. முன்னுரை – சபை வரலாற்றின் காலகட்டங்கள்
முழுத் தொடரில் நாம் சபை வரலாற்றின் முழுப் பயணத்தையும் அல்ல, அப்போஸ்தலர் காலத்திலிருந்து சீர்திருத்த காலம்வரையிலான முக்கியமான 1500 வருடங்களைத்தான் விவரமாகப் பார்க்கிறோம்.
சபை வரலாற்றின் இந்த நீண்ட பயணத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளவும், மனதில் அழுத்தமாகப் பதிக்கவும்
1. கி.பி 30முதல் கி.பி 100வரை அப்போஸ்தலர் காலத்துச் சபை என்றும்,
2. கி.பி 100முதல் கி.பி 312வரை (அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரை) ஆதிச் சபை என்றும்,
3. கி.பி 312முதல் கி.பி 1000வரை (அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானபிறகு) ஆரம்ப காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும்,
4. கி.பி 1000முதல் கி.பி 1500வரை (அதாவது சீர்திருத்தகாலம்வரை) பிந்தைய காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும் நான்கு காலகட்டங்களாகப் பிரித்துக்கொள்கிறேன் என்று நான் ஏற்கெனவே சொன்னேன்.
முதல் ஒன்பது பாகங்களில் கி.பி 30முதல் கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலத்துச் சபையையும், கி.பி 100முதல் கி.பி 312வரையிலான, அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரையிலான, ஆதிச் சபையையும் பார்த்தோம்.
பத்தாம் பாகத்தில் நாம் ஆரம்ப காலப் கிறிஸ்தவ பேரரசைப் பார்க்க ஆரம்பித்தோம். கான்ஸ்டன்டீன் (Constantine) கிறிஸ்தவனான கி.பி 312இல் தொடங்கி ஏறக்குறைய 1200 ஆண்டுகள் நீடித்த இந்த பேரரசைத் தெளிவாக விளக்க கி.பி 312முதல் கி.பி 1000வரையிலான காலகட்டத்தை ஆரம்ப காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும், கி.பி 1000முதல் கி.பி 1500வரை, அதாவது சீர்திருத்தகாலம்வரையிலான காலகட்டத்தைப் பிந்தைய காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும் பிரித்துக்கொள்கிறேன் .
1.1 துறவறத்தின் நன்மை தீமைகள் – ஓர் அறிமுகம்
இந்தப் பதினோறாவது பாகத்தில், “ஆரம்பக் காலக் கிறிஸ்தவப் பேரரசை"த் தொடர்கிறோம். இந்தப் பாகத்தில், முக்கியமாக, தனியறைத்துறவறத்தின் (Monasticism) நன்மையையும் தீமையையும்பற்றிப் பார்க்கப்போகிறோம். Monasticism - தனியறைத்துறவறம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறேன். ஆனாலும், இந்தப் பாகத்தில் அதை நான் துறவறம் என்றே குறிப்பிடுகிறேன்.
தனியறைத்துறவறம் (Monasticism)—சிலருக்கு இது ஆவிக்குரியநிலையின் உச்சகட்டம், வேறு சிலருக்கு இது ஒரு பயனற்ற ஓரம்ஒதுங்குதல். ஆனால் சபை வரலாற்றில், தனியறைத்துறவறம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் இயக்கம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
மேற்கத்திய கிறிஸ்தவத்திலும், கிழக்கத்திய கிறிஸ்தவத்திலும் துறவிகள், சந்நியாசிகள், தவசிகள், கன்னியாஸ்திரீகள் (nuns), மடாதிபதிகள் (abbots) ஏராளமானோர் எழும்பினார்கள்; துறவற மடங்கள், மௌன மடங்கள், குருமடங்கள் (monastic orders) உருவெடுத்து வளர்ந்தன. அந்தக் காலத்தில் அது ஓர் அதிரடி இயக்கம்; அதன் தாக்கம் ஆழமானது. இன்றும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆகவே, சபை வரலாற்றில் நாம் துறவறத்தையும், துறவறமடங்களையும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். துறவறமடங்களின் ஒளியையும், நிழலையும் பார்த்தால்தான் அதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
2. உரோமப் பேரரசின் வீழ்ச்சி – ஒரு வரலாற்றுப் பின்னணி
அழியாத அரசின் அழிவு
இதற்காக நாம் உரோமப் பேரரசின் வீழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கும் துறவற மடங்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழும். நியாயமான கேள்வி. கொஞ்சம் பொறுமையோடு கேளுங்கள். உங்களுக்குப் புரியும். உரோமப் பேரரசின் வீழ்ச்சிதான் துறவற மடங்கள் தோன்றிய சூழமைவு, பின்புலம்.
உரோமப் பேரரசு ஒரு காலத்தில் உலகை நடுங்கச்செய்தது. உரோமப் பேரரசின் காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்களில் "Invicta Roma Aeterna" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. "அழிக்கமுடியாத, நித்திய உரோம்" என்பது இதன் பொருள். ஆம், உரோமப் பேரரசு ஒருபோதும் அழியாமல் என்றென்றும் நீடித்திருக்கும் என்று அன்று கருதப்பட்டது. அது ஒரு கனவு மட்டும் அல்ல; அது அவர்களுடைய நம்பிக்கை. முதலாவது உரோமக் குடியரசும் (Roman Republic), பின்னர் உரோமப் பேரரசும் (Roman Empire) ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சியது ஆச்சரியம்தானே! ஒரு சாம்ராஜ்யம் 1000 வருடங்கள் நீடிப்பது சாதாரணமா? பல நேரங்களில் உரோமக் குடியரசும், உரோமப் பேரரசும் நொறுங்கிப்போய்விடுமோ, உடைந்து சின்னாபின்னமாகிவிடுமோ என்ற பயமும், நிலைமையும் ஏற்பட்டது. ஆனால், அது மீண்டும் எழுந்து வந்து காலத்தை ஆட்சிசெய்தது.
ஆனால், எந்தப் பேரரசாக இருந்தாலும் சரி, எத்தனை நூற்றாண்டுகள் ஆண்டாலும் சரி, மனித கைவினையால் கட்டப்பட்ட எந்த அரசும் நிரந்தரமாக நிலைக்காது, நிலைக்க முடியாது. வரலாற்றின் இந்தக் கோட்பாடு, உரோமின்மீது 410ஆம் ஆண்டில் முழுமையாகப் பாய்ந்தது.
2.1 அலாரிக் – அந்த நாள் திகிலின் நாயகர்
அழிக்கமுடியாத நித்தியப் பேரரசு என்று கருதப்பட்ட உரோமின் கனவு கி.பி 410இல் கலைந்தது, சிதைந்தது. உரோம் நகரம் முற்றுகையிடப்பட்டு, எரிக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டது. கி.பி 412க்குமுன்பே மேற்கத்திய உரோமப் பேரரசு (Western Roman Empire) பல ஆண்டுகளாக சரிந்துகொண்டிருந்தது.
விசிகோத்துகள் (Visigoths) என்ற ஜெர்மானிய இனத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால கோத்துக் குலத்தார் (Gothic tribe) முதலாவது உரோமப் பேரரசின் எல்லைகளுக்கு வெளியே வாழ்ந்தார்கள். விசிகோத் (Visigoth) தலைவன் அலாரிக் (Alaric), மேற்கத்திய உரோமப் பேரரசின்மீது இரண்டுமுறை தாக்குதல் நடத்தினான். உரோமின் நெஞ்சிலே எட்டி உதைத்தான். இரண்டுமுறையும், பணக்கார உரோம செனட்டர்கள் (senators) அவன் கேட்ட பணத்தை அவனுக்கு இலஞ்சமாகக் கொடுத்து அவனைத் திருப்பிஅனுப்பினார்கள். அவனும் பணத்தைக் வாங்கிக்கொண்டு போய்விட்டான். இதனால், உரோமின் வீழ்ச்சி தள்ளிப்போடப்பட்டது. ஆனால், கி.பி 410இல் அலாரிக் மீண்டும் உரோமின்மேல் படையெடுத்துவந்தபோது, உரோம நகர மக்கள் ஏற்கெனவே பல நாட்களாக பசி பட்டினியால் வாடிக்கொண்டிருந்தார்கள். அலாரிக் கேட்ட பணத்தைக் கொடுப்பதற்கு அவர்களிடம் பணம் இல்லை. நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது. பேரம்பேசி அவனை அனுப்ப வழியில்லை. தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் அவர்கள் ஏற்கெனவே கொடுத்துவிட்டார்கள்.
"என்னுடையது" என்று உரோம் சொன்னதையெல்லாம், அவன் தன்னுடையதாக்க விரைந்தான். அவர்கள் அலாரிக்கிடம், "நீ நகருக்குள் நுழைந்தால், ஆயிரக்கணக்கான உரோமர்கள் உன்னை எதிர்த்துப் போராடுவார்கள்," என்று பெருமிதந்துடன் சொல்லியனுப்பினார்கள். அதற்கு அலாரிக், "புல் அடர்த்தியாக இருக்கும்போது, அதை வெட்டுவது எளிது," என்று பதில் அனுப்பினான். உரோம் நகரைப் பாதுகாக்க எழும்பும் உரோமர்களைவிட தான் பலமாக இருப்பதாகவும், தன் படைபலம் அதிகம் என்றும், தான் சாதகமான நிலைமையில் இருப்பதாகவும் அலாரிக் நினைத்தான். எனவே, அவன், "உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் — நகரத்தில் இருக்கும் அடிமைகள் உட்பட தங்கம், வெள்ளி, ஆலயங்களின் ஆபரணங்கள் என கொள்ளையடிக்க முடிந்த, கொண்டுசெல்லத்தக்க, அனைத்தையும் - தர வேண்டும்" என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அவனோடு பேச்சுவார்த்தை நடத்திய உரோமர்கள், "எல்லாவற்றையும் நீ எடுத்துக்கொண்டுபோய்விட்டால் எங்களுக்கு என்ன மீதியிருக்கும்?" என்று கேட்டார்கள். அதற்கு அலாரிக், "உங்கள் உயிர்," என்று பதில் அனுப்பினான்.
கி.பி 410, ஆகஸ்ட் 24ஆம் நாள், உரோம் நகரில் இருந்த யாரோவொருவன் நகரத்தின் 12 கோட்டைவாசல்களில் ஒரு கோட்டை வாசலைத் (fortified gate) திறந்துவிட்டான். அலாரிக்கின் படைகள் நகருக்குள் புகுந்து, நகரத்தை முற்றுகையிட்டு, மூன்று நாட்கள் உரோமைச் சூறையாடின, கொள்ளையடித்தன. மரணமும், கொள்ளையும், பயமும் நகரத்தை மூடின. மூன்று நாட்களில் உலகின் மிகச் சிறந்த உரோம் நகரம், சிறைப்பட்ட நகர்போல விழுந்தது. இது வரலாற்றில் மிகவும் கவலைக்கிடமான, புலம்பெயர்வுகளை ஏற்படுத்திய ஒரு முக்கியமான சம்பவமாகக் கருதப்படுகிறது.
2.2 விழுந்த உரோம் – உருக்கம் கண்டவர்கள்
உரோமின் வீழ்ச்சியைக் கேட்ட, கண்ட பலர் உருகினார்கள், உடைந்தார்கள். அப்போது பெத்லகேமில் இருந்த வேதாகம மொழிபெயர்ப்பாளர் ஜெரோம் (Jerome) உரோமின் வீழ்ச்சியைக்குறித்து கேள்விப்பட்டு, மிகுந்த துயரத்தில் மூழ்கினார்; இவரைப்பற்றி நாம் பின்னர் பேசுவோம். அவரால் மூன்று நாட்கள் பேச முடியவில்லை. ஜெரோம் கொஞ்சக் காலம் உரோமில் வாழ்ந்தார். உரோம் வீழ்ந்தது என்று கேள்விப்பட்ட ஜெரோம், "அகில உலகையும் வீழ்த்திய நகரம் இப்போது வீழ்ந்தது! அழியாத நகரமே அழிந்தது என்றால், வீழாது என்று எண்ணிய நகரமே வீழ்ந்தது என்றால், வேறு எது அழியாது, வேறு எது வீழாது!" என்று கூறினார்.
உரோம் வீழ்ந்தபோது உரோமில் இருந்த ஒரு பிரிட்டிஷ் துறவி, அப்போது அங்கு நிலவிய நிலைமையைக்குறித்து, "ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் குடிகொண்டது; எங்கும் எல்லாரையும் பயம் ஆட்கொண்டது," என்று கூறினார்.
2.3 நீண்ட வீழ்ச்சி – ஒரு நிறைவு
விசிகோத் (Visigoth) தலைவன் அலாரிக்கின் தாக்கம் முடிவல்ல. கி.பி 455இல் ஜென்செரிக் (Genseric) என்பவரின் தலைமையிலான வாண்டல்கள் (Vandals) படைகள் உரோமுக்குள் புகுந்து நகரை நாசம்செய்தன. வாண்டல்கள் என்பவர்கள் ஜெர்மானிய இனத்தைச் சேர்ந்த ஒரு வல்லரசுக் கூட்டம். இவர்கள் முதலாவது இரண்டாம் நூற்றாண்டில் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்தார்கள். உரோமப் பேரரசின் அழிவின்போது ஸ்பெயினுக்கும் வடக்கு ஆப்பிரிக்காவுக்கும் சென்றார்கள். வடக்கு ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் நகரத்தைக் கைப்பற்றி அங்கு ஒரு வல்லரசை அமைத்தார்கள். இந்த ஜென்செரிக் என்பவன் கி.பி 428முதல் 477வரை வாண்டல்களின் அரசனாக இருந்தான். ஜென்செரிக்கின் தலைமையில் வாண்டல்கள் வட ஆப்பிரிக்காவைக் கைப்பற்றி, மத்திய தரைக்கடலில் ஒரு கடற்படை சக்தியாக உயர்ந்தார்கள். ஜென்செரிக் தலைமையில், வாண்டல்கள் உரோமுக்குக் கப்பல்களில் வந்து ஐந்து நாட்கள் நகரத்தை கொள்ளையடித்தார்கள். இது அலாரிக்கின் 410ம் ஆண்டுச் சூறையாடலைவிட மோசமாக இருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இதற்குப்பிறகு, மேற்கத்திய உரோமப் பேரரசு பெயரளவில் மட்டுமே இருந்தது.
இறுதியாக கி.பி 476இல் இன்னொரு ஜெர்மானிய இனக்குழுவைச் சேர்ந்த ஒடோவேசர் (Odoacer) என்ற காட்டுமிராண்டிகளின் தலைவன் (barbarian chieftain), உரோமின் கடைசிப் பேரரசன் 12 வயது சிறுவனான ரோமுலுஸ் அகஸ்டுலசை (Romulus Augustulus) முறியடித்து, பதவியிலிருந்து அகற்றினான். உரோம் நகரத்தில் தன் ஆட்சியை ஏற்படுத்தினான். ஒடோவேசரின் ஆட்சியுடன், உரோமப் பேரரசின் மாநில நிர்வாகம், இலக்கியம், இராணுவம், கலாசாரம் போன்ற அனைத்தும் காட்டுமிராண்டிச் சக்திகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இவ்வாறு, மேற்கத்திய உரோமப் பேரரசு முற்றிலும் வீழ்ந்தது. அழிக்கமுடியாத உரோம் நகரம் என்ற கனவு... அழிந்தது.
3. உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்
3.1 அணைந்த பேரரசுகள்
உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு ஏற்பட்ட மாற்றங்களை நாம் தெரிந்தாக வேண்டும். மனித வரலாற்றில் முறையே எகிப்து (Egypt), அசிரியா (Assyria), பாபிலோன் (Babylon), பெர்சியா (Persia), கிரேக்கம் (Greece) எனப் பல பேரரசுகள் கோலோச்சி, பின்னர் வீழ்ந்தன. இவைகள் அணைந்த பேரரசுகள். அந்தப் பட்டியலில் இப்போது உரோமப் பேரரசும் சேர்ந்துவிட்டது. ஆயினும், உரோமப் பேரரசு தனிச்சிறப்புவாய்ந்தது. ஒன்று, வேறு எந்தப் பேரரசும் உரோமப் பேரரசைப்போல் ஆயிரம் ஆண்டுகள் ஆளவில்லை. அது மட்டும் அல்ல. இரண்டு, வேறு எந்தப் பேரரசிலும் உரோமப் பேரரசில் ஏற்பட்ட அளவுக்கு பரந்த அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்ப மாற்றங்களும், விவசாய முறைகளில் ஏற்பட்ட முன்னேற்றமும், உருவாகவில்லை; மூன்றாவது, உரோமப் பேரரசில் நிலவிய ஒழுங்கு வேறு எந்தப் பேரரசிலும் நிலவவில்லை.
ஆனால், இந்தச் சீரும் சிறப்பும் ஒரு நாள் சிதைந்தது. "அழியாத நகரம்" என அழைக்கப்பட்ட உரோம் வீழ்ந்தது. இந்த வீழ்ச்சி வெறும் ஒரு நகரத்தின் வீழ்ச்சி அல்ல, ஒரு பேரரசின் முடிவல்ல. இது ஓர் ஒழுங்குமுறையின் சிதைவு. உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் வந்த காலம்தான் வரலாற்றில் "இருண்ட காலம்" (Dark Ages) என அழைக்கப்படுகிறது.
உரோமப் பேரரசின் வீழ்ச்சி, மேற்கத்திய உலகத்தில் ஏற்படுத்திய பாதிப்பை இன்று நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. உரோம் வீழ்ந்தபோது மேற்கத்திய உலகம் இருளில் மூழ்கியது. உரோமின் வீழ்ச்சி மேற்கத்திய உலகில் (Western world) பேரழிவை ஏற்படுத்தியது. இது, நவீன மேற்கத்திய உலகம் இதுவரை ஒருபோதும் அனுபவித்திராத பேரதிர்ச்சியை உருவாக்கியது.
எடுத்துக்காட்டாக, கி.பி 350திலிருந்து 650வரையிலான காலகட்டத்தில், மேற்கத்திய உரோமப் பேரரசில் மக்கள் குறைந்த ஆயுட்காலம்தான் வாழ்ந்தார்கள், கொடிய வறுமை வாட்டியது, தொழில்நுட்ப முன்னேற்றம் கணிசமாகக் குறைந்தது, கல்வியறிவு (literacy) பெருமளவில் சரிந்தது, சமூகஒழுங்கு (societal order) நிலைகுலைந்து. அரசியல் அமைப்பு சிதைந்தது.
நான் இப்படிச் சொல்வதால் கி.பி 350க்குமுன் மக்களுடைய வாழ்க்கை பரலோகம்போல் இருந்தது என்று நான் சொல்வதாக நினைக்கவேண்டாம். ஒருவேளை நம்முடைய இன்றைய நவீன தரத்தோடு ஒப்பிடுகையில் அது அப்படி இல்லாமல் போகலாம். ஆனால், நான் கூற விரும்புவது இதுதான். உரோமின் வீழ்ச்சிக்குப்பிறகு நிலைமை மிக மோசமாகியது. உரோமின் வீழ்ச்சிக்குப்பின் ஏற்பட்ட குழப்பம், சமூகப் பின்னடைவு, மேற்கத்திய உலகை உலுக்கியது.
4. துறவற இயக்கத்தின் நன்மைகள்
4.1 ஒளி வீசிய மடங்கள் - ஒரு புதிய காலத்தின் தொடக்கம்
இப்போது துறவற இயக்கத்துக்கு வருகிறேன். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கும், வீழ்ச்சிக்குப்பின் ஏற்பட்ட குழப்பத்துக்கும், துறவற இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? துறவற இயக்கத்தைப் புரிந்துகொள்ள இந்த வரலாற்றுப் பின்புலம், சூழமைவு, தெரிந்தாக வேண்டும்.
கி.பி. 476இல் மேற்கத்திய உரோமப் பேரரசு வீழ்ந்தபிறகு, ஐரோப்பாவில் பெரும் குழப்பம் நிலவியது என்று சொன்னேன். ஐரோப்பாவில் அந்த இருளின் மத்தியில் துறவற மடங்களே ஒளியாக இருந்தன. ஐரோப்பாவில் அரசியல் அமைப்பு சிதைந்தது. சமூக ஒழுங்கு கெட்டது; கல்வி, கலாசாரம், தொழில்நுட்பம் அனைத்தும் பின்னடைந்தன. இந்நேரத்தில், துறவற இயக்கம்தான் ஐரோப்பாவில் ஒளிர்கின்ற ஒற்றைத் தீபமாய் இருந்தது. ஆம், துறவற மடங்களே கல்வி, கலாச்சாரம், சமுதாய சேவைகளின் முக்கிய மையங்களாக, கோட்டைகளாக, விளங்கின. அவைகளே கடந்த கால நம்பிக்கையின் பாதுகாப்பாகவும், நிகழ்காலத்தில் மக்களுக்கு நிழலாகவும், வழிகாட்டியாகவும் விளங்கின. துறவிகளும், கன்னியாஸ்திரீகளும் சமுதாயத்தின் விளக்காக மாறினார்கள். இது துறவற இயக்கத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று — அது அன்றைய இருளில் வீசிய ஒளி. அது ஒரு புதிய காலத்தின் தொடக்கம்.
4.2 மடங்கள் – கல்வி, கலாசாரம், ஒழுங்கின் கோட்டைகள்
இரண்டாவது, உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு ஐரோப்பாவில் கல்வியறிவு குறைந்தது, கல்விக்கூடங்கள் மறையத்தொடங்கின. இந்த சூழலில், துறவற மடங்களே கல்வி மையங்களாக, இயேசுவின் உண்மையான சீடர்களை உருவாக்கும் சீடத்துவப் பள்ளிகளாக, (discipleship schools) செயல்பட்டன. துறவற மடங்கள் (monasteries) மக்களுக்குச் செவ்வியல் கல்வியையும், வேதாகமச் சத்தியங்களையும், தொழில்நுட்பக் கலைகளையும் கற்றுத்தந்தன. பழைய கிரேக்க நூல்களையும், உரோமானிய நூல்களையும், வேதாகமத்தையும், கிறிஸ்தவ நூல்களையும் துறவற மடங்களே கையெழுத்தாக நகலெடுத்துப் பாதுகாத்தன. அன்று நகலெடுக்க இயந்திரங்கள் கிடையாது. கையால் எழுதி நகலெடுத்தார்கள்.
மடங்கள் – நூற்றாண்டுகளுக்குப் பின்னும் தாக்கம்
நூற்றாண்டுகள் கழிந்தும், ஐரோப்பாவில் பெருநகரங்கள் உருவாகியபிறகும்கூட, சில மடங்கள் பலத்த தாக்கத்தைச் செலுத்தின. பல பல்கலைக்கழகங்களின்மூலமாக மடங்கள் கல்வியளித்தன. சபையின் ஆவிக்குரிய நிலையையும், நூல்களையும் பாதுகாத்தன. கிறிஸ்தவச் சிந்தனையின் வளர்ச்சிக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்தன. இதுவே பின்னர் மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பாவின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
4.3 சமுதாய சேவைகள்:
மூன்றாவது, துறவற மடங்கள் மக்களுக்கே உணவு, தங்குமிடம், மருத்துவ சேவைகளை வழங்கி, சமூக நலத்தில் முக்கிய பங்கு வகித்தன. இதனால் மடங்கள் சமூகத்தின் அத்தியாவசிய அங்கங்களாக மாறின.
4.4 பயிற்சியும், விவசாயமும்:
நான்காவது, துறவிகள் விவசாயத் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, புதிய பயிர்களை அறிமுகப்படுத்தினார்கள். இது, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி, சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது.
4.5 மடங்கள் – மக்களின் புகலிடங்கள்
ஐந்தாவது, மடத்தலைவர்கள் மடங்களை வெறுமனே உலகத்திலிருந்து ஒதுங்கி தனித்து வாழ்வதற்குரிய மௌன மடங்களாகப் பார்க்கவில்லை; மாறாக, அவர்கள் தங்கள் மடங்களை இன்னல்களிலும், இக்கட்டுகளிலும், பேரழிவுகளிலும் இருந்த மக்களுக்கு ஆவிக்குரிய ஊக்கம் அளித்து, அவர்களுக்காகத் தேவனிடம் திறப்பின்வாசலில் நின்று பரிந்துபேசுகிற ஜெபத்தின் வாசல்களாக மாற்றினார்கள். மடங்கள் மக்கள் ஒதுங்குவதற்கானப் புகலிடங்களாக மட்டுமல்ல, அவர்களுக்காகப் பரிந்துரைக்கும் இடங்களாகவும் ஆனது.
4.6 துறவிகள் மட்டும் அல்ல... மிஷனரிகளும்!
ஆறாவது, மிக முக்கியமாக, இந்தக் காலகட்டத்தில் துறவிகள் தங்களை மடத்துக்குள் அடைத்துக்கொள்ளவில்லை; பிறரிடமிருந்து ஒதுங்கி நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடவில்லை; அறைகளில் முடங்கவில்லை; அவர்கள் துறவற வாழ்க்கையை மேற்கொண்டார்கள் (monastic life); உண்மை. அதே நேரத்தில் அவர்கள் மிஷனரிகளாக வெளியுலகத்திற்குச் சென்று நற்செய்தியும் அறிவித்தார்கள். வீதிகளில் முழங்கினார்கள். எல்லாத் துறவிகளும் என்று சொல்லமுடியாவிட்டாலும் பெரும்பாலான துறவிகள் தொலைதூர நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார்கள். இந்த இரண்டு பொறுப்புக்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
துறவிகளே ஐரோப்பாவைக் கிறிஸ்தவமயமாக்கிய முன்னோடிகள். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதிலும், காப்பாற்றுவதிலும் இவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள்.
இந்தக் காலத்தில் வாழ்ந்த துறவிகள் சந்தித்த சூழ்நிலைகள் மனதைப் பதற வைக்கும் அளவுக்குக் கடுமையானவை. ஒரு பக்கம் காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகள், போர்கள்; இன்னொரு பக்கம் பஞ்சம், பசி, வறுமை; இன்னொரு பக்கம் ஆறாம் நூற்றாண்டில் புபோனிக் தொற்றுநோயினால் ஐரோப்பாவில் பேரழிவு. பயங்கரமான நெருக்கடிகள். இத்தனை அழிவிலும், அச்சுறுத்துதலிலும், துறவிகள் விசுவாசத்தில் உறுதியாக இருந்து, இருளின் மத்தியில் அரிய ஒளிக்கீற்றைப்போல் நற்செய்தியைத் தொய்வின்றுப் பரப்பினார்கள்.
4.7 கேன்டர்பரி – ஒளிக்கதிர் வீசிய மடம்
இதற்கு சான்றாக நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.
இங்கிலாந்தில் கேன்டர்பரி என்ற இடத்தில் இருந்த ஒரு பெனடிக்டின் துறவறமடம் தன்னைச்சுற்றியிருந்த மக்களுக்கு மட்டும் நற்செய்தி அறிவிப்பதோடு நிற்காமல், அதையும் தாண்டி பல்வேறு இடங்களில் நற்செய்தியை அறிவித்தார்கள். இதனால் ஏராளமானோர் மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
‘பெனடிக்டின்’ என்றால் என்ன என்ற ஒரு கேள்வி எழக்கூடும். நல்ல கேள்வி. காலப்போக்கில் பல துறவற மடங்கள் தோன்றின. அவர்களில் பெனடிக்ட் என்பவர் மிக முக்கியமானவர். அவருடைய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுபவர்கள் 'பெனடிக்டின்' துறவிகள். சரி, தொடர்வோம். கேன்டர்பரி துறவற மடம் ஒளி வீசிய மடம்.
4.8 அரசர்கள் மனமாறியபோது...
ஆங்கில வரலாற்றாசிரியரான பீட் கூறுவதுபோல், அந்த நாட்களில் மக்கள் துறவிகளின் எளிய வாழ்க்கையைப் பாராட்டினார்கள். அவர்கள் அறிவித்த பரம செய்திகளில் ஆறுதல் அடைந்தார்கள். கேன்டர்பரி மடம் நற்செய்தி அறிவிக்கின்ற, நற்செய்தியாளர்களை உருவாக்குகின்ற, ஒரு மையமாக உருவானது.
இவர்களுடைய நற்செய்தியைக் கேட்டு கென்ட் நாட்டின் அரசன் எதல்பர்ட் மனந்திரும்பி, கிறிஸ்தவரானார். அவருடைய மனைவி பெர்தா பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவர்; இதனால்கூட ஒருவேளை எதல்பர்ட்டின் இருதயம் இயேசுவை விசுவாசிப்பதற்கு ஏற்கெனவே ஆயத்தமாக இருந்திருக்கக்கூடும்.
அந்த நாட்களில் இங்கிலாந்து பல இனங்களாலும் கோத்திரங்களாலும் ஆன சமுதாயமாக இருந்தது. கீழ்த்தட்டு மக்கள் இயல்பாகவே தங்கள் கோத்திரத் தலைவரின் வழியில் செல்வதுதான் வழக்கமாக இருந்தது. கென்ட் நாட்டின் அரசன் எதல்பர்ட் கிறிஸ்தவனானதால் நாட்டின் குடிமக்களும் கிறிஸ்தவர்களானார்கள்.
கேன்டர்பரியில் தொடங்கிய இந்த முன்மாதிரி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நிகழ்ந்தது. தலைவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதும் அந்தக் கோத்திரம் முழுவதும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது.
வரலாற்றாசிரியர் பீட் குறிப்பிடுவதுபோல், தன் நாட்டின் குடிமக்கள் தாங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்றலாம் என்று நாட்டின் அரசன் எதல்பர்ட் அவர்களுக்குச் சுதந்திரம் வழங்கியபோதும், நாட்டில் பெரும்பாலோர் அவரைப் பின்பற்றி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
அரசன் நற்செய்தியை ஏற்றுக்கொண்டதும், மிஷனரிகள் பாதுகாப்போடும் விடுதலையோடும் நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்தார்கள். நாடெங்கும் சபைகள் உருவாயின. நற்செய்தி பரவியது. மக்களின் வாழ்வும், நாகரிகமும் மாற்றமடைந்தன.
5. துறவற வாழ்க்கையின் உருவாக்கம்
5.1 ஹெர்மிட்கள் – ஒதுங்கும் ஒளி
துறவற இயக்கத்தின் நன்மைகளைச் சுருக்கமாகப் பார்த்தோம். சரி, இப்போது துறவற இயக்கம் எப்படி ஆரம்பித்தது என்று பார்ப்போம்.
பொதுமக்களிடமிருந்து விலகி தனித்து வாழும் துறவற வாழ்க்கைமுறை, ஹெர்மிட்கள் (hermits) எனப்படும் பழங்கால முனிவர்களிடமிருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது! தனித்திருக்கும் வாழ்க்கை தேவனோடு ஆழமான உறவுகொள்வதற்கான வழி என்று அவர்கள் நம்பியதால் அவர்கள் எல்லாரிடமிருந்தும், எல்லாவற்றிலுமிருந்தும் ஒதுங்கி தனிமையில், பெரும்பாலும் வறண்ட பாலைவனங்களில், தேவனோடு ஆழமான உறவில் வாழ்ந்தார்கள்.
உங்களுடைய ஆவிக்குரிய பயணத்தில் நீங்கள் ஒருவேளை சில நேரங்களில் எல்லாவற்றிலிருந்தும் விலகி, எந்தக் குறுக்கீடும், தலையீடும், இல்லாமல், ஒன்றிரண்டு நாட்கள் தனித்திருந்து தேவனைத் தேடிய நேரங்கள் இருக்கலாம் அல்லது அப்படிப்பட்ட நேரங்களை விரும்பியிருக்கலாம்.
ஆனால், ஒன்றிரண்டு நாள்களை மட்டும் அல்ல, ஹெர்மிட்கள் தங்கள் முழு வாழ்க்கையை இதற்காக அர்ப்பணித்தார்கள். அவர்கள் முடிந்தவரை சமுதாயத்திலிருந்து விலகி, தேவனுடைய பிரசன்னத்தில் மட்டுமே வாழத் தீர்மானித்தார்கள்.
இன்னொரு சாரார் இருந்தார்கள். நகரத்தில் ஏற்பட்ட சித்திரவதைகளிலிருந்து தப்பிய கிறிஸ்தவர்கள் நாட்டுப்புறங்களில் தனிமையில் வாழத் தள்ளப்பட்டார்கள். அவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இந்த நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். நாட்டுப்புறங்களுக்குத் தப்பிச்சென்றவர்கள் அங்கு சிறிய குழுக்களாகவோ அல்லது தனியாகவோ வாழ்ந்தார்கள். பின்னாட்களில், உரோமப் பேரரசு கிறிஸ்தவப் பேரரசாக மாறியபோதும், நாட்டுப்புறங்களில் தனித்து வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இந்த வாழ்க்கைமுறையைத் தொடர்ந்தார்கள். ஏனென்றால், தனித்திருக்கும் வாழ்க்கை ஒருவன் தேவனோடு மிக நெருக்கமான உறவு கொண்டுவாழ்வதற்கான சிறந்த வழி என்று கருதப்பட்டது. இவ்வாறு, தனித்திருக்கும் வாழ்க்கை ஆரம்ப காலத் துறவிகளின் அடையாளமாக மாறியது. பின்னர், இது ஆவிக்குரிய வளர்ச்சிக்கான வாழ்க்கைமுறையாக ஏற்கப்பட்டது.
5.2 சுயமறுப்பு – உயர்ந்த ஓசை
துறவற வாழ்க்கையின் மற்றொரு அடிப்படை சாராம்சம் தவம், கடும்நோன்பு, சந்நியாசம், அதாவது சுயமறுப்பு. உலகின் வசதிகளையும், சம்பத்துக்களையும், சிற்றின்பங்களையும் மறுத்து, வெறுத்து, ஒறுத்து, கடுமையான நோன்பும், ஒழுக்கமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது சிறப்பானது என்றும், உயர்வானது என்றும் கருதப்பட்டது. நவீன உலகம் சுயதிருப்தியை அடிப்படையாகக்கொண்டு சுழல்கிறது. இன்று பலர் பேச விரும்பாத சுயகட்டுப்பாடு, சுயமறுப்பு, ஆதிச் சபையின் இயல்பு வாழ்க்கையாக இருந்தது.
5.3 ஒரிஜனும், ஒப்பில்லா உழைப்பும்
தங்கள் விசுவாசத்தை ஆழமாக்கவேண்டும் என்ற ஆர்வம்கொண்ட இளம் கிறிஸ்தவர்கள், சுயத்தை மறுத்து வாழப் பயிற்சி பெறுவதற்காகத் துறவிகளைத் தங்களுடைய பயிற்சியாளர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களிடம் பயின்றார்கள். மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த சபை முற்பிதா ஓரிஜன் இந்தக் கடுமையான சுயமறுப்பின் முன்னோடியாகத் திகழ்ந்தார். ஓரிஜன் தரையில் படுத்துறங்கினார். நீண்ட தூரம் வெறுங்காலால் நடந்தார், மிகக் கடுமையான உபவாசம் இருந்தார் —இவை அவருடைய அன்றாட வழக்கம். நான்காம் நூற்றாண்டுவரை, பல கிறிஸ்தவர்கள் ஓரிஜனின் பயிற்சிகளைப் பின்பற்றினார்கள். இதுபோன்ற பயிற்சிகள் ஆவிக்குரிய பக்தியின் ஒரு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
5.4 ஜெரோம் – வழிகாட்டி
ஜெரோம் என்ற ஒரு பரிசுத்தவானைப்பற்றிப் பின்னர் விரிவாகப் பேசுவோம். இப்போது நாம் அவரைப்பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். உரோம் நகரில் சிறு குழுக்களாகக் கூடி சுயத்தை மறுத்து, ஒறுத்து துறவற வாழ்க்கை வாழ விரும்பிய பல பணக்காரப் பெண்களுக்கு ஜெரோம் ஓர் ஆவிக்குரிய வழிகாட்டியாக இருந்தார். அந்தப் பெண்கள் பழைய ஏற்பாட்டை எபிரேய மொழியில் படித்தார்கள். தீவிரமான துறவறப் பயிற்சிகளில் ஈடுபட்டார்கள். அன்று பெண்கள் சாதாரணமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடாததால் இவர்களைச் சுற்றியிருந்தவர்கள் இந்தப் பெண்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள்; விநோதமாகக் கருதினார்கள். எனவே, அவர்கள் சமுதாயத்தின் வெறுப்பையும், எதிர்ப்பையும் சந்திக்கவேண்டியிருந்தது. இந்தக் குழுவில் இருந்த ஓர் இளம் விதவை ஒருநாள் திடீரென்று காலமானார். அதிகமாக உபவாசித்ததால்தான் அவர் இறந்தார் என்று மக்கள் நம்பினார்கள். இதனால் எழுந்த கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளமுடியாமல் ஜெரோம் நகரத்தைவிட்டுப் பெத்லகேமுக்குத் தப்பியோடினார். அங்கு அவரும், இறந்த இளம் விதவையின் அம்மா பவுலாவும் சேர்ந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே துறவற மடங்களை நிறுவினார்கள். இந்தத் துறவற மடங்கள் மிகவும் பிரபலமடைந்தன,
5.5 ஆன்றனி – பாலைவனத்தின் ஒளிக்கதிர்
எகிப்தின் ஆன்றனி (Anthony of Egypt) போன்றவர்களைப்பற்றி நினைக்கும்போது, வறண்ட பாலைவனத்தில் தன்னந்தனியாக வாழ்ந்த தவசிகளைப்பற்றிய (solitary monk) எடுத்துக்காட்டுகள் நினைவுக்கு வருகின்றன. எகிப்திய, எத்தியோப்பிய சபை வரலாற்றைபற்றிப் பேசியபோது ஏற்கெனவே நாம் ஆன்றனியைப்பற்றிப் பேசியிருக்கிறோம். எனவே, இப்போது அவருடைய வாழ்க்கையைப்பற்றி மீண்டும் ஒருமுறை விவரமாகப் பேசத் தேவையில்லை. ஆனால், அவரைப்பற்றிச் சுருக்கமாக நினைப்பூட்ட விரும்புகிறேன். ஆன்றனி எகிப்தின் பாலைவனங்களில் வாழ்ந்தார். மாற்கு 10இல் உள்ள “பணக்கார வாலிபனைப்பற்றிய” கதை அவருடைய வாழ்க்கையில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இயேசு அந்த வாலிபனிடம் சொன்ன வார்த்தைகளை அவர் தனக்கே சொன்னதாக எடுத்துக்கொண்டார். ஆகையால், அவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று, பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, எல்லாரிடமிருந்தும் பிரிந்து தனியாகச் சென்றுவிட்டார்.
முதலாவது, தன் வீட்டருகே தவவாழ்க்கை வாழ்ந்த வேறொரு தவசியின் மேற்பார்வையில் தன் வீட்டருகே தவவாழ்க்கையை மேற்கொண்டார். அதன்பின், அவர் ஒரு கல்லறையில் வாழ்ந்தார். பின்னர் இன்னும் தொலைவிலுள்ள பாழடைந்த ஒரு கோட்டையில் வாழ்ந்தார். அவருடைய நண்பர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அவருக்கு உணவு கொண்டுவந்து கொடுத்தாரகள். தண்ணீர் மட்டுமே குடித்தார். உயிர்ப்பு பெருநாளில் முடிவெட்டினார், முடியை வாரினார்.
பாலைவனத்தில் வாழ்ந்த பல்வேறு துறவிகளைப்போல, ஆன்றனியும் பல விசித்திரமான காட்சிகள் கண்டார், பேய் பிசாசுகளின் தொல்லையை அனுபவித்தார், கடுமையான சோதனைகளை எதிர்கொண்டார். அவை அனைத்தும் அவரைத் தேவனிடமிருந்து விலக்கவே என்று அவர் புரிந்துகொண்டார்.
ஆன்றனியைப்பற்றி இது போதும். ஆனால், அவர் கிறிஸ்தவத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய வாழ்க்கை, தீவிர துறவற வாழ்வின் விளக்கமாகவும், பிறருக்குப் பலம் அளிக்கிற தெய்வீக சாட்சியாகவும் மாறியது.
5.6 ஒளிக்கதிராக துறவறம்
இவ்வாறு துறவற வாழ்க்கை எளிமை, ஒழுக்கம், தனிமை, தியானம், தேவனோடு நேரடி உறவு போன்றவைகளைப் புதிதாக வெளிக்கொணர்ந்தது. அவர்களுடைய வாழ்க்கை நம்மைச் சிந்திக்க வைக்கும் ஒரு கனலாக இன்றும் திகழ்கிறது.
6. துறவற வாழ்க்கையின் விசித்திர வடிவங்கள்
6.1 தூணின்மேல் வாழ்ந்தவர்கள் – ஸ்டைலைட்கள்
இவ்வாறு ஏராளமானோர் துறவற வாழ்க்கையைத் தெரிந்தெடுத்தார்கள்.. அவர்களில் சிலர் பின்பற்றிய பாதை மிகவும் விசித்திரமானது. குறிப்பிடத்தக்க ஒரு குழு ஸ்டைலைட்கள் (Stylites), அதாவது "தூணின்மேல் வாழ்ந்த புனிதர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த இயக்கத்தின் தலைவராகக் கருதப்படும் சிமியோன் கி.பி. 459இல் இறந்தார். ஒரு தூணின்மேல் வாழ்ந்தால் தன் ஆத்துமா தேவனுக்கு அருகில் இருக்கும் என்று அவர் நம்பினார்.
அதன் ஆரம்பம் - ஆறடி உயரத் தூண். ஆம், இவர் ஆரம்பத்தில் ஓர் ஆறடி உயரத் தூணில் வாழத் தொடங்கினார். அதன்பின் உயரத்தை உயர்த்திக்கொண்டே போய், இறுதியாக, 60 அடி உயரத் தூணின்மேல் 30 ஆண்டுகள் வாழ்ந்தார்.
தன்னைத் தேடி வந்த மக்களுக்குத் தூணின்மேல் இருந்தபடி நற்செய்தி அறிவித்தார். இவரைப் பின்பற்றியவர்கள்தான் "ஸ்டைலைட்கள்" என அழைக்கப்பட்டார்கள். ‘ஸ்டைலோஸ்’ (stylos) என்ற கிரேக்க வார்த்தைக்குத் “தூண்” என்று பொருள். இவர்கள் பரிசுத்தத்தைத் தேடி தூணில் வாழ்ந்தார்கள்.
6.2 பாவத்திலிருந்து ஒதுங்க, பாலைவனத்திற்குள்...
வேறு சிலர், நகரங்களின் பாவச் சோதனைகளில் சிக்காமல் இருக்க, நகரத்தைவிட்டு விலகி, பாலைவனங்களில் தனித்து வாழத் தொடங்கினார்கள். “நகரத்தைவிட்டு வெளியேறினால், சோதனைகள் வராது; சோதனைகளுக்குத் தப்பித்துவிடலாம்," என்பது இவர்களுடைய எண்ணம். இச்சைகளிலிருந்து விலக, மக்கள் நடுவிலிருந்து ஒதுங்கினார்கள். ஆனால், நகரத்தை விட்டு வெளியேறி தனித்துவாழ்ந்தபோதும், பாவச் சோதனைகள் தங்களைத் தொடர்ந்து வருவதை இவர்கள் உணர்ந்தார்கள். பாவம் தங்கள் உள்ளத்திலேயே குடிகொண்டிருப்பதை இவர்கள் கண்டார்கள். தீய ஆவிகளோடு கடுமையான ஆவிக்குரிய போராட்டங்களைச் சந்தித்தார்கள்.
6.3 தவவாழ்க்கை உணவு – எளிமையின் அடையாளம்
இவர்கள் மிக எளிமையான உணவு உண்டார்கள். கட்டுப்பாடான உணவுப் பழக்கம் தவவாழ்க்கைக்கு உதவும் என்று பலரும் நம்பினார்கள். எனவே, இவர்கள் பெரும்பாலும் உணவில் கட்டுப்பாடுடன் வாழ்ந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் ரொட்டி, பருப்புவகைகள், காய்கறிகள் ஆகியவைகளையே சாப்பிட்டார்கள்.
6.4 அருமையான ஆவிக்குரிய பழக்கங்கள்.
வேதாகாமம்தான் அவர்களுடைய வாழ்வின் வழிகாட்டி. அதை அவர்கள் ஊன்றிப் படித்தார்கள். மனப்பாடம் செய்தார்கள், தியானித்தார்கள். எகிப்தின் ஆன்றனிக்குப் படிக்கத் தெரியாது. அனால், பிறர் வேதாகமத்தை வாசிப்பதை உன்னிப்பாகக் கவனித்து அனைத்தையும் உள்வாங்கினார்.
6.5 சுவர்களில் சங்கீதம் – ஒரு தவசியின் நினைவுத்தூண்டல்கள்
ஒரு தவசி எகிப்தில் ஒரு பழமையான கல்லறையில் நீண்டநாள் வாழ்ந்தார். அந்தக் கல்லறை கற்பாறையில் வெட்டப்பட்டது. அதன் சுவர்களில் அவர் ஒவ்வொரு சங்கீதத்தின் முதல் வரியை எழுதியிருந்தார். சங்கீதத்தின் முதல் வரியைப் பார்த்ததும் முழுச் சங்கீதம் அவர் நினைவுக்கு வந்துவிடும்.
அவ்வளவு ஆர்வமாக அவர்கள் வேதாகமத்தை மனப்பாடம் செய்தார்கள், நேசித்தார்கள். அது அவர்களுடைய வாழ்வில் வெளிப்பட்டது. வேதாகமம் – அவர்களுடைய வாழ்வின் ஒளியாய், வழிகாட்டியாய் இருந்தது.
7. பெனடிக்ட்டும், அவருடைய துறவறமடத்தின் விதிமுறைகளும்
7.1 பலர் தொடங்கிய மடங்கள்
கிறிஸ்தவ வரலாற்றில் காலப்போக்கில் பல்வேறு துறவற மடங்கள் (Monastic Orders) உருவெடுத்தன. அவை அனைத்தும் அதை நிறுவியவரின் பெயரால் அழைக்கப்பட்டன: பெனடிக்ட் உருவாக்கியது பெனடிக்டின் மடம்; பிரான்சிஸ் உருவாக்கியது பிரான்சிஸ்கன் மடம். ஒவ்வொரு மடத்தின் ஆடைகளும், ஒழுங்குமுறைகளும் (rules) தனித்தன்மைவாய்ந்தவை.
7.2 முக்கியமானவர் பெனடிக்ட்
பல்வேறு மடங்கள் இருப்பினும், பெனடிக்ட்டின் மடமும், அதன் விதிமுறைகளும் மிகவும் முக்கியமானவை.
பெனடிக்ட் யார்? பெனடிக்ட் என்பவர் கிபி 6ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் ஒரு கிராமப்புறத்தில் வாழ்ந்த ஓர் உயர்குடிமகன். இவர் உலக வாழ்க்கையைத் துறந்து தனிமையில் தவ வாழ்க்கை வாழத் தீர்மானித்தார். இவருடைய பரிசுத்தமான வாழ்க்கையையும், இவர் மூலமாகப் பலர் சுகம் பெற்றதையும் கேள்விப்பட்டவர்கள் அவரைப் பார்க்க வந்தார்கள்.
7.3 அவருடைய முதற்கட்ட அனுபவம்
அந்தக் காலத்தில் வாழ்ந்த பல உள்ளூர்த் துறவிகள் பெனடிக்ட் எவ்வாறு தனித்து, தியானித்து வாழ்கிறார் என்பதைக் காண அவரை வந்து சந்தித்தார்கள். பின்னர், ஒரு கட்டத்தில் அவர்கள் பெனடிக்டைத் தங்களுடைய மடத்துக்குத் தலைவராக வருமாறு அழைத்தார்கள். அவர் சம்மதித்தார். ஆனால் அவர் வரையறுத்த ஒழுங்குகளும், கட்டுப்பாடுகளும் மிகக் கடுமையாக இருந்ததால், அந்தத் தவசிகள் விரைவில் அவரை நிராகரித்தார்கள். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை என்று சொல்லலாம். அவர்கள் இருமுறை அவரை விஷமிட்டு கொல்லவும் முயன்றார்கள்.
7.4 புதிய துவக்கம்
இதனால், பெனடிக்ட் அந்த மடத்தை விட்டு வெளியேறினார். இது அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு முக்கியமான திருப்புமுனை. ஏனென்றால், அதன்பின் அவர் பன்னிரண்டு மடங்களை ஏற்படுத்தினார். ஒவ்வொரு மடமும் தன் விருப்பம்போல், தன்னிச்சையாக நடக்காமல், எல்லாரும் முறையாகவும் ஒழுங்காகவும் செயல்பட வேண்டும் என்பதற்காக, அவர் “பெனடிக்ட்டின் விதிமுறைகள்” என்ற ஒரு கையேட்டை எழுதினார்.
இந்த விதிகளே துறவற வாழ்வைக் கட்டமைக்கும் ஒழுங்குமுறையாக மாறியது. தியானம், ஆராதனை, பணிவிடை, சமய அறிவு, நேரக் கட்டுப்பாடு, தாழ்மை என அனைத்தும் இதில் அடங்கும். இந்த Rule of Benedictதான் மேற்கத்திய தவவாழ்க்கையின் அடித்தளமாக அமைந்தது. பல நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்றும் பலர் அவைகளைத் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.
7.5 விதிமுறைகள் – வாழ்க்கையின் வரைபடம்
சரி, இப்போது பெனடிக்ட்டின் விதிமுறைகளைப்பற்றிச் (Rule of Benedict) சிறிது பார்ப்போம். இது கிபி 529ஆம் ஆண்டு எழுதப்பட்டது. "Rule of Benedict" என்பது வெறும் “இதைச் செய்/ இதைச் செய்யாதே” என்ற சட்டதிட்டங்களின் தொகுப்பல்ல; எழுத்தாளர் ஹ்யூ பீஸ் (Hugh Feiss) சொல்வதுபோல, இது ஒழுங்கான, ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கான ஒரு வரைபடம்.
இத்தகைய ஒரு வழிமுறையை பெனடிக்ட் புதிதாக உருவாக்கவில்லை; இப்படிப்பட்ட வாழ்க்கைமுறை, பெனடிக்ட்டிக்குமுன்பே, கிறிஸ்தவச் சமூகத்தில் ஏற்கெனவே 200 ஆண்டுகளாக வளர்ந்துகொண்டிருந்தது. அவர் தனக்குமுன் ஏற்கெனவே இருந்த சில வழிகாட்டி நூல்களை அடிப்படையாக எடுத்துக்கொண்டார்; Rule of the Master என்ற ஒரு நூல் அதில் ஒன்று. ஆனால், பெனடிக்ட் எழுதிய "ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கான சிறிய விதி" (little rule for beginners) என்ற நூல்தான் மேற்கத்திய துறவற வாழ்க்கைக்கான உயர்ந்த மாதிரியாக மாறியது.
7.6 சுருக்கமான ஆனால் ஆழமான நூல்
இது அதிகபட்சம் 50 பக்கங்கள் மட்டுமே கொண்ட மிகச் சிறிய நூல். ஆனால் அதில் இருக்கும் ஞானமும், ஆவிக்குரிய அறிவும், மிதமான வழிகாட்டுதல்களும், வேதாகமத்தின் கோட்பாடுகளும், நெகிழ்வான நடைமுறைகளும் அளவற்றவை.
சரி, இப்போது பெனடிக்ட்டின் விதிகள் எனும் நூலிலிருந்து சில பகுதிகளை நான் வாசிக்கிறேன். கவனியுங்கள். இதோ! ஒரு பகுதி:
"ஒவ்வோர் அம்சத்திலும், அனைவரும் ஒழுங்குமுறைகளை வழிகாட்டியாகக்கொண்டு நடக்க வேண்டும்; சரியான காரணம் இல்லாமல் யாரும் அவைகளை மீறக்கூடாது. மடத்தில் யாரும் தங்களுடைய சொந்த எண்ணங்களின்படியும், விருப்பங்களின்படியும் வாழக்கூடாது; யாரும் மடாதிபதியோடு ஆணவத்தோடு வாதிடக்கூடாது. மடாதிபதி, தன் தீர்மானங்களுக்கும், தீர்ப்புகளுக்கும் ஒரு நாள் தேவனுக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டியிருக்கும் என்பதை நினைவில்கொண்டு, கர்த்தருக்குப் பயந்து, மடத்தின் விதிகளுக்கு உத்தமமாகக் கீழ்ப்படிந்து தன் எல்லாப் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்."
இந்த சிறிய பகுதி பெனடிக்ட்டின் அணுகுமுறையின் உள்ளார்ந்த சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது-ஒழுங்கு, தாழ்மை, கணக்கு ஒப்புவித்தல், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கும் ஒரே கோட்பாடு என்பவை அவர் கூறும் வாழ்க்கையின் அடித்தளம் என்று தெரிகிறது.
7.7 ஒழுங்கின்மை – எச்சரிக்கையும், தண்டனையும்
சரி, மீண்டும் பெனடிக்ட் எழுதிய விதிமுறைகளைத் தொடர்வோம். அந்த ஒழுங்குமுறைகளை ஒருவர் பின்பற்றவில்லை என்றால் என்ன செய்வது?
அதற்கும் பெனடிக்ட் எழுதியுள்ளார். இதோ, அவருடைய பதில்:
"ஒரு சகோதரன் கீழ்ப்படியாமல், அதிகாரத்திற்கு அடிபணியாமல், அகந்தையோடு நடந்தால், குறைகூறினால், முமுறுமுறுத்தால், பரிசுத்தமான விதிகளை மீறினால், மூத்தவர்களின் அறிவுறுத்தல்களை இகழ்ந்தால்-அவர், கர்த்தர் கட்டளையிட்டபடி, அதிகாரத்தில் உள்ளவர்களால் இருமுறை தனிப்பட்ட முறையில் எச்சரிக்கப்பட வேண்டும். அது பயனளிக்கவில்லை என்றால், அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அடுத்த கட்டமாக, அனைவருக்கும் முன்னிலையில் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட வேண்டும். அதற்குப்பிறகும் அவர் திருந்த மறுத்தால், அவரைத் தற்காலிகமாக சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். அவர் அந்தத் தண்டனையின் தீவிரத்தை உணர்ந்தால் நல்லது. ஆனால் அதை உணராமலும், இன்னும் திருத்தத்திற்கு இடமளிக்காமல் கடினமான மனநிலையோடு தொடர்ந்தால், உடல்ரீதியான தண்டனை அளிக்கப்பட வேண்டும்."
ஆம்-பெனடிக்ட்டின் விதிகள் சில நேரங்களில் கடுமையானவை. ஒருவர் ஒழுங்குகளுக்குச் செவிகொடுக்க மறுத்தால், திருத்தத்துக்குத் தயார் இல்லையென்றால், நெறிப்படுத்துதல் அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பது இன்றியமையாததாகிவிடும். பெனடிக்ட் கோட்பாட்டில் ஒழுங்கும், சிட்சையும் தவவாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சங்கள்.
7.8 ஒவ்வொருவருக்கும் பணி
சரி, தொடர்வோம். அடுத்த பகுதி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. பெனடிக்ட் இவ்வாறு எழுதுகிறார்:
"எல்லாச் சகோதரர்களும் சமையல் உட்பட எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சமையலறைப் பணிகளைத் தவிர்க்க யாருக்கும் அனுமதி இல்லை. எல்லாச் சகோதரர்களும், வாரந்தோறும் வேலையை மாற்றிக்கொண்டு, ஒருவருக்கொருவர் பணிவிடை செய்ய வேண்டும். ஒருவருக்கு நோயோ அல்லது தவிர்க்க முடியாத அத்தியாவசிய வேலையோ இருந்தால் மட்டுமே விதிவிலக்கு அளிக்கலாம். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்குமுன், அந்த வாரம் சமையலறையில் சேவை செய்பவர்களுக்கு சிறிது ரொட்டியும், குடிக்க ஒரு பானமும் கூடுதலாகக் கொடுக்கப்படும்-அவர்கள் குறைகூறாமல், களைப்பின்றி மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் பணிபுரிய இது உதவியாக இருக்கும்.”
7.9 பெனடிக்ட்டின் மௌன மடம்
பெனடிக்ட்டின் விதிமுறைகளின்படி மடத்து வாழ்க்கை அமைதியின் மடியில் கழிந்தது. உணவு நேரங்கள்கூட சத்தங்கள் மறைந்த தூய அமைதி நிறைந்த ஒரு விழாதான். சாப்பிடும்போது ஒரேவொரு குரல் மட்டுமே கேட்கும்- வேதாகமத்தின் ஒரு பகுதியோ அல்லது அதனோடு தொடர்புடைய புனித எழுத்தின் ஓசையோ மட்டுமே கேட்கும். அந்த ஒற்றைக் குரலின் வழியே அமைதியின் ஆழமான ஓடை பாய்ந்து சென்றது. வாசிப்பவரின் குரலைத்தவிர வேறு எந்த சத்தமும், கிசுகிசுப்பும் இருக்கக்கூடாது. தேவையான உணவுப் பொருட்களை மௌனமாகவே ஒருவர் மற்றொருவருக்கு மெல்லப் பரிமாற வேண்டும். யாரும் வாய்திறந்து எதையும் கேட்கக்கூடாது. ஏதேனும் தேவைப்பட்டால், சைகைகளால் தெரிவிக்க வேண்டும். அமைதியும் தியானமும் இரு கண்கள்போல பெனடிக்ட்டின் மடத்தின் ஆன்மாவாய் வாழ்ந்தன. அமைதி ஓர் ஆழ்ந்த பயணம். தியானம் - ஒரு வாழ்வியல்.
7.10 தனிப்பட்ட உடைமைகள்- தடை!
பெனடிக்ட்டின் விதிமுறைகளிலிருந்து நாம் தொடர்ந்து வாசிப்போம்:
"சோம்பல் ஆத்துமாவின் எதிரி. எனவே குறிக்கப்பட்ட நேரங்களில் சகோதரர்கள் வேலைசெய்ய வேண்டும்; மற்ற நேரங்களில் புனித நூல்கள் வாசிக்க வேண்டும். ஒருவருக்கு படுக்க ஒரு படுக்கை; படுக்கையில் விரிக்க ஒரு விரிப்பு, போர்த்த ஒரு கம்பளிப்போர்வை, ஒரு தலையணை - இவை போதும். மடாதிபதி அடிக்கடி சகோதர்களின் அறைகளைச் சோதித்து, இவைகளைத்தவிர வேறு தனிப்பட்ட உடைமைகள் வைத்திருக்கிறார்களா எனக் கண்காணிக்க வேண்டும். யாரிடமாவது மடாதிபதி வழங்காத பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். தனிப்பட்ட உடைமைகளை முற்றிலும் ஒழிக்க, ஒருவருக்குத் தேவையான அனைத்தையும் மடாதிபதியே வழங்குவார்: குல்லாயுடன் கூடிய மேலங்கி, காலணி, நீண்ட காலுறைகள், இடைக்கச்சை, கத்தி, எழுதுகோல், ஊசி, கைக்குட்டை, எழுதும் பலகைகள் - இவை அனைத்தும் கொடுக்கப்படுவதால், வேறு பொருட்கள் தேவைப்படாது."
பெனடிக்ட்டின் மடத்து வாழ்க்கை எவ்வளவு கட்டுப்பாடும், ஒழுங்கும் நிறைந்தது என்பதை நீங்கள் இப்போது உணர்ந்திருப்பீர்கள். பெனடிக்ட்டின் மடத்தில் யாரும் தனிப்பட்ட உடைமை வைத்திருக்கக்கூடாது; அது முற்றிலும் தடைசெய்யப்பட்டது. பொருட்கள் துறவறத்துக்கும், தூய்மைக்கும் தடையாகக் கருதப்பட்டன.
7.11 கடைசி சிந்தனைகள்
பெனடிக்ட்டின் விதிமுறைகளிலிருந்து இன்னொரு பகுதியைப் பார்ப்போம். அவர் இவ்வாறு எழுதுகிறார்:
"இது கர்த்தருக்காக வாழ்கிற, கரத்தரைச் சேவிக்கின்ற மனிதர்களை உருவாக்குகிற பள்ளி. எங்கள் விதிமுறைகள் ஆரம்பத்தில் கடினமாக, கண்டிப்பாக, சுமையாகத் தோன்றினாலும், பயந்து ஓடிவிட வேண்டாம். இரட்சிப்பின் பாதையின் நுழைவாயில் குறுகலாகத்தான் இருக்க வேண்டும்; ஆனால் ஒருவன் இந்த விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கும்போது, அவனுடைய இருதயம் விரிவடையும்; அவன் இனிமையான அன்பால் உந்தப்பட்டு, தேவனுடைய கற்பனைகளின் பாதையில் மகிழ்ச்சியோடு வேகமாக ஓடத் தொடங்குவான்."
இந்தப் பகுதிகளை வாசிக்கும்போது, மடத்து வாழ்க்கை ஒழுங்கும், கண்டிப்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்க்கை என்று தெளிவாகத் தெரிகிறது. சகோதரர்கள் தங்களைத் தேவனுக்கும் சகோதரர்களுக்கும் முழுமையாக அர்ப்பணித்து வாழ வேண்டும் என்றும், தேவனுடனும் சகோதரர்களுடனும் ஆழமான ஐக்கியத்தோடு தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் புரிகிறது. அவர்கள் இணைந்து, பொதுவாக வாழ்ந்தார்கள். ஒழுங்கும், கீழ்ப்படிதலும், பணிவும் ஒருங்கிணைந்தால், துறவற சமுதாயத்தின் சாட்சி உறுதியானதாக இருக்கும் என்று தெரிகிறது. இவைகளே பெனடிக்ட்டின் மடத்து வாழ்க்கையின் சிறப்பு அம்சங்கள்.
8. துறவற வாழ்க்கை - விமரிசனம்
8.1 சோம்பேறிகள் என்ற குற்றச்சாட்டு
பெனடிக்ட்டின் மடத்து விதிமுறைகள் ஐரோப்பா முழுவதும் இருந்த துறவற மடங்களின் இலட்சிய முறையாகக் கருதப்பட்டது. ஆனால், "மடங்கள் சோம்பேறிகளைத்தான் உருவாக்குகிறது, தேவனுடனான உறவில் அவர்களுடைய அர்ப்பணம் குறைந்துவிட்டது," என்ற விமரிசனம் காலப்போக்கில் எழுந்தது. "இவர்கள் பயனற்றவர்கள், சோம்பேறிகள், சும்மா இருக்கிறவர்கள்," என்ற குற்றச்சாட்டு இவர்கள்மேல் சுமத்தப்பட்டது. இந்த விமரிசனமும், குற்றச்சாட்டும் சரியா, தவறா என்று நான் தீர்மானிக்கப்போவதில்லை.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டும், விமரிசனமும் ஆதாரமற்றவை என்பதற்கு நான் ஒரு பெனடிக்ட்டின் துறவியின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை உங்கள்முன் வைக்கிறேன்.
அதிகாலை 2:30 மணிக்குத் துயிலெழுந்து "டிவைன் ஆபீஸ்" அல்லது இலத்தீன் மொழியில் "விஜில்ஸ்" என்று சொல்லப்படும் கூட்டு ஜெபம்
3:45–5:00 AM: தனிப்பட்ட வேத வாசிப்பு, ஜெபம், கூட்டு ஜெபத்துக்குத் தேவையான சங்கீதங்களையும், பிற ஆவிக்குரிய புத்தகங்களையும் படிப்பது
5:00–5:45 AM: இலத்தீன் மொழியில் "லாட்ஸ்" என்றழைக்கப்படும் அதிகாலை கூட்டு ஜெபம்
6:00 AM: சூரிய உதயத்தில் கூட்டு ஜெபம்
6:45–8:30 AM: மடத்தைப் பெருக்குதல், துடைத்தல், கழுவுதல்போன்ற வேலைகள், தோட்ட வேலைகள், கைவினைகள், விவசாயம்
8:30 AM: கூட்டு ஜெபம்
8:45 AM–1:00 PM: தனிப்பட்ட வாசிப்பு, தியானம்
1:00 PM: மதியநேர கூட்டு ஜெபம்
1:15 PM: அமைதியாக அமர்ந்து, பொதுவாசிப்பைக் கேட்டுக்கொண்டு, ஒன்றாகச் சேர்ந்து உணவு,
1:45–2:30 PM: சிறிது ஓய்வு, வாசிப்பு, தேவைப்பட்டால் கொஞ்சம் உறக்கம்
2:30 PM: கூட்டு ஜெபம்
2:45–6:00 PM: மீண்டும் மடத்து வேலைகள்
6:00–6:45 PM: மாலை ஜெபம்
7:00 PM: பொதுவாசிப்பும், அமைதியான மாலை உணவும்
8:00 PM: நாளின் கடைசி கூட்டு ஜெபம்
8:30 PM: உறக்கம்
ஒரு நாளை இப்படிக் கடந்து வந்த உடலும், மனமும் இரவு எட்டரை மணிக்கு உறங்குவதற்கு நிச்சயமாகத் தயாராகிவிடும்.
8.2 சோம்பேறிகளா? தவவாழ்க்கையின் நிஜம்
இது சோம்பேறிகளின் வாழ்க்கையா என்று நீங்களே தீர்மானியுங்கள். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ எவ்வளவு கடின உழைப்பு, எவ்வளவு அர்ப்பணிப்பு, எவ்வளவு கடமை உணர்வு தேவைப்படும் தெரியுமா?
ஆனாலும், எல்லா விஷயங்களிலும் இலட்சியத்திற்கும் யதார்த்தத்திற்கும் நடுவே ஓர் இடைவெளி இருக்கும் என்பது உண்மை. சில மடங்கள் சில நேரங்களில் இந்த இலட்சியங்களை எட்டத் தவறியிருக்கலாம்.
8.3 ஞானத்தின் கோட்டைகள்
இருந்தாலும், அந்த மடங்களே அக்காலத்தில் ஞானம், தெய்வபக்தி, கல்வி, கற்றல் ஆகியவைகளைப் பாதுகாத்த கோட்டைகளாக விளங்கின. நூல்களைப் பாதுகாத்தார்கள், ஆவிக்குரிய சிந்தனைகளை வளர்த்தார்கள், வரலாற்றையும் விசுவாசத்தையும் முன்னெடுத்தார்கள். அதிலும் குறிப்பாக, கிழக்கு மரபைச் சேர்ந்த சில துறவிகளின் எழுத்துக்களை நாம் பார்ப்போம். அவைகளிலிருந்து அவர்கள் சிந்தித்த முறையையும், அவர்களுடைய ஞானத்தின் சாரத்தையும் நாம் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
9. துறவற ஞானம் – மேற்கோள்கள்
துறவற வாழ்க்கை என்பது வெறுமனே ஒதுங்கி வாழ்வதோ, ஒழுங்குகளைக் கடைபிடிப்பதோ அல்ல. அது ஒருவனுடைய ஆவியில் உருவாகும் ஓர் ஆழமான பயணம். சில துறவிகளின் ஞானத்தையும், வாழ்க்கைத் தருணங்களிலிருந்து பிறந்த சில மேற்கோள்களையும் பார்ப்போம்.
9.1 உபவாசமும், உள்போராட்டமும்
முதலாவது, குள்ள ஜான் (John the Short) என்ற துறவி உபவாசத்தைப்பற்றி கூறிய கருத்தைப் பார்ப்போம்.
" ஓர் அரசன் தன் எதிரியின் நகரத்தைக் கைப்பற்ற விரும்பினால், முதலாவது அவன் அந்த நகரத்தில் வாழும் மக்களின் உணவு, நீர் ஆகியவைகளின் விநியோகத்தைத் துண்டிக்கிறான். அவர்கள் பட்டினியால் பலவீனமடையும்போது அவர்களை எளிதில் அடக்கிவிட முடியும். இதுவே பெருந்தீனிக்கும் (வயிற்றுப்பெருமைக்கும்) பொருந்தும். ஒருவர் உண்மையாகவே உபவாசித்து, பசியால் தன் உடலை அடக்கினால், அவருடைய ஆத்துமாவைத் தொந்தரவு செய்யும் எதிரிகள் பலவீனமாகிவிடுவார்கள்," என்று அவர் கூறினார்.
இந்த வார்த்தைகள் துறவிகளின் எண்ண ஓட்டத்தை நன்றாக விளக்குகின்றன. "நான் உபவாசம்போன்ற பயிற்சிகளின்மூலம் என் உடலை அடக்கியிருந்தால், சோதனைகளை எதிர்க்கும் ஆற்றல் என்னுள் அதிகரிக்கும்; தெய்வபக்தியும் என்னுள் ஆழமாக நிலைத்திருக்கும்," என்பதே அவர்களுடைய அடிப்படையான நம்பிக்கையாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. பசி என்பது ஒன்றைத் தூண்டும் சக்தி மட்டுமல்ல; அதை அடக்கும்போது உருவாகும் உள்ளார்ந்த வலிமைதான் உண்மையான ஆவிக்குரிய வளம் என்று இவர் கூறுகிறார். உபவாசத்தையும் உள்ளான போராட்டத்தையும் படம்பிடித்துக்காட்டுகிறார்.
9.2 வார்த்தைமுதல் வாழ்க்கைவரை
அடுத்து, போமென் (Poemen) என்ற துறவி வார்த்தையையும், வாழ்க்கையையும்பற்றிக் கூறிய ஒரு கருத்தைப் பார்ப்போம்.
"நீ உன் வாயின் வார்த்தையினால் பிறருக்குக் கற்பிப்பதை, உன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க உன் இருதயத்திற்குக் கற்பி," என்று இவர் கூறினார்.
"நீ மற்றவர்களுக்கு ஒன்றைக் கற்பிக்கிறாயானால், முதலில் அதை நீயே வாழ்ந்து காட்ட வேண்டும். பிறருக்குக் கற்பிப்பதை முதலில் உன் இதயத்தில் ஆழமாக வைத்திருக்க வேண்டும்," என்பதே இதன் உட்கருத்து. தேவ நோக்கத்தைக் கற்பிப்பது ஒரு பக்கம்; அதை வாழ்வதுதான் உண்மையான போதனை. வார்த்தைகள் வாழ்வில் சித்தமாக வேண்டும். வார்த்தைமுதல் வாழ்க்கைவரை
9.3 வரமா வாழ்க்கையா
அடுத்து, அகத்தோ (Agatho) என்ற துறவி கோபத்தைப்பற்றிக் கூறிய ஒரு கருத்தைப் பார்ப்போம். "ஒரு கோபக்காரன் மரித்த ஒருவனை உயிரோடெழுப்பினாலும்கூட, தேவன் அவனுடைய கோபத்தின்மேல் திருப்தியடைய மாட்டார்."
இதில் மிகுந்த ஞானம் நிறைந்திருக்கிறது. தேவன் ஒருவனைப் பயன்படுத்துகிறார் என்பதால், அவனுடைய தனிப்பட்ட பாவங்கள் நியாயமாகிவிடாது. பிரமிக்கத்தக்க செயல்கள் பரிசுத்தமான வாழ்க்கைக்கு ஈடாகாது; ஒருவனுடைய உள்ளத்தின் நிலையில்தான் தேவன் திருப்தியடைகிறார். அகத்தோ சொன்ன இந்த வார்த்தைகள் மிகவும் ஆழமானவை, நுட்பமானவை.
9.4 இடமல்ல, உள்ளம்தான் முக்கியம்
'மடாதிபதி மாத்ரோனா' என்ற ஒரு கன்னியாஸ்திரி கூறிய இன்னொரு அழகான கருத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
“மலைமேல் தனித்து வாழ்ந்த பலர், உள்ளத்தில் உலகத்தாரைப்போலவே வாழ்ந்து தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை இழந்தார்கள். மக்கள் கூட்டத்திலிருந்து உடலளவில் ஒதுங்கி தனிமையில் இருந்து, உள்ளத்தால் எப்போதும் கூட்டத்திற்காக ஏங்கிக்கொண்டிருப்பதைவிட, மக்கள் கூட்டத்தினிடையே வாழ்ந்தாலும் உள்ளத்தால் தனித்திருக்கும் வாழ்க்கையே மேலானது.”
வெளிப்படையாக ஒதுங்குவதற்குப்பதிலாக, உள்ளத்தில் உன்னத ஒதுக்கத்தை வாழ்வதற்கான அழைப்பு இது.
மாத்ரோனா சொன்ன இந்த வார்த்தைகளில் ஆழமான உள்நோக்குதலும் ஞானமும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நாம் எங்கு வாழ்கிறோம் என்பதல்ல; எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்.
துறவற வாழ்க்கையினால் மக்களுடைய தேவனுடனான உறவு ஆழமானது, அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் தரம் வளமானது. எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் இப்படி நடந்தது என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. துறவற வாழ்க்கை உண்மையான ஆவிக்குரிய பலனை அளித்ததா, இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்புதான்.
9.5 பிசாசுகள் கவரும் ஆத்துமா
இன்னொரு மேற்கோள்தருகிறேன்.
ஒருமுறை அப்ராம் என்ற ஒரு துறவி, போமெனை நோக்கி, “பிசாசுகள் என்னை ஏன் இப்படித் தாக்குகின்றன?” என்று கேட்டார். அதற்கு போமேன், “பிசாசுகள் உண்மையிலேயே உன்னைத் தாக்குகின்றனவா? நாம் நம் சொந்த இச்சைகளின்படி நடக்கும்போது, பிசாசுகள் நம்மைத் தாக்கத் தேவையில்லை. ஏனென்றால், நம் சொந்த இச்சைகளே பிசாசுகளைப்போல ஆகிவிடுகின்றன; அவைகளே நம்மைத் துன்புறுத்தி, தங்களுக்குக் கீழ்ப்படியும்படி நம்மை நிர்ப்பந்திக்கின்றன. பிசாசுகள் உண்மையில் யாருடன் போராடுகின்றன என்று தெரிந்துகொள்ள விரும்பினால், மோசேயைப்போன்ற மனிதர்களைத்தான் நாம் பார்க்க வேண்டும்,” என்றார்.
அந்த துறவி சொன்ன வார்த்தைகளின் பொருள் என்ன? “சாத்தானும் அவனுடைய தூதர்களான பிசாசுகளும் உன்னைத் தாக்குகின்றன என்றால், அது குறைந்தபட்சம் நீ சரியான பாதையில் பயணிக்கிறாய் என்பதற்கான ஓர் அடையாளம்,” என்பதுதான் அந்த வார்த்தைகளின் சாரம்.
9.6 சுமையைத் தாங்கும் அழகு
ஒரு துறவி இச்சையைப்பற்றிப் பகிர்ந்த ஒரு சிறிய - ஆனால் ஆழமான - ஞான வார்த்தையை இப்போது பார்ப்போம்.
ஓர் இளம் துறவியும், ஒரு முதிய துறவியும் நடத்திய உரையாடலைப் பாருங்கள்: இளம் துறவி இச்சையோடு கடுமையாகப் போராடினான். இதைக் கவனித்த முதியவர் கருணையோடு அவனிடம், “உன்னை இழுத்துச் செல்லும் இச்சையோடு நீ போராடுவது எனக்குத் தெரியும். தேவன் உன்னை இதிலிருந்து விடுவிக்குமாறு நான் ஜெபிக்க வேண்டுமா?” என்று வினவினார். அதற்கு அந்த இளம் துறவி தாழ்மையோடு, "அப்பா, இது ஒரு வலி நிறைந்த சுமைதான். ஆனால் அந்தச் சுமையை சுமப்பதால் நான் ஆளாக்கப்படுகிறேன். இதனால் என்னுள் ஓர் ஆழம் உருவாகிறது. எனவே, அது என்னைவிட்டு அகல வேண்டும் என்று ஜெபிக்க வேண்டாம். மாறாக, அதை நீடித்த பொறுமையோடும் சக்தியோடும் தாங்கக்கூடிய வல்லமையை எனக்குத் தரும்படி தேவனை வேண்டுங்கள்" என்று பதிலளித்தான்.
அவனுடைய பதிலைக் கேட்ட முதியவர் மெதுவாகப் புன்முறுவலுடன், "“மகனே, நீ என்னை மிஞ்சிவிட்டாய் என்று இப்போது எனக்குத் தெரிகிறது” என்றார்.
அந்த துறவியின் ஞானத்தைப் பாருங்கள். நாம் சந்திக்கும் ஆவிக்குரிய சுமைகள்உட்பட எல்லாச் சுமைகளிலிருந்தும் விடுதலைபெற வேண்டும் என்று நாம் ஜெபிக்க வேண்டியதில்லை. அவைகளைத் தவிர்க்கவேண்டும் என்ற தேவையும் இல்லை. அதற்குப்பதிலாக, அவைகளை ஆவிக்குரிய வளர்ச்சிக்கான வாயிலாகக் கருதி, அவைகளை நம்பிக்கையோடும் பொறுமையோடும் தாங்கக்கூடிய ஆற்றலைத் தருமாறு வேண்டுவதே உண்மையான, தேவையான வரம்.
இந்த மேற்கோள்கள் ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் அழுத்தமும், அமைதியும் கொண்டவை. ஒவ்வொன்றும் தவவாழ்க்கையின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல; அந்த வாழ்க்கையின் உள்ளார்ந்த நுண்ணறிவுகளாகவும் விளங்குகின்றன.
10. துறவற மடங்கள் – பயனும் பிழையும்
10.1 ஒளி வீசிய, ஒழுங்கு நிறைந்த மடங்கள்
கிழக்கிலே பிறந்த துறவற இயக்கம் மலர்ந்து, பின்னர் மேற்கில் விரிவடைந்தது. மேற்கத்திய நாகரிகம் இருளில் மூழ்கியிருந்த அந்தக் காலத்தில் துறவற இயக்கம் ஒளி வீசியது என்பது மறுக்கமுடியாத வரலாற்று உண்மை.
மௌன மடங்கள் ஞானத்தை கற்றுக்கொடுத்தன, ஒழுக்கத்தை நிலைநிறுத்தின, கல்வியையும் பணிவையும் வளர்த்தன. மனித சமுதாயத்தில் ஒழுங்கையும், தியானமிக்க வாழ்க்கையும் வலிமையாக நம்பிக்கையுடனும் கட்டமைப்புடனும் வளர்த்தன.
10.2 தவறக் காரணமாயிருந்த சில எண்ணங்கள்
ஆயினும், இந்த இயக்கத்தில் சில சிக்கல்களும் இருந்தன. துறவற மடங்களில் தனிமையில் வாழ்வதுதான் உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை என்ற தவறான எண்ணம் சில சமயங்களில் அவர்களிடையே நிலவியது. மௌன மடங்கள்தான் உண்மையான ஆவிக்குரிய நிலையின் ஒரே வடிவமாகக் கருதப்பட்டது. “நீ உண்மையாகவே தேவனுக்காக வாழ விரும்புகிறாயா? அப்படியானால் இந்த உலகத்திலிருந்து முழுவதும் விலகி, ஒரு மௌன மடத்தில் வாழ்” என்ற ஓர் எண்ணம் அங்கு நிலவியது. இதனால், துறவிகள்தான் உண்மையான உயர்ந்த விசுவாசிகள், மற்றவர்கள் சாதாரணமான, தாழ்வான விசுவாசிகள் என்ற படிநிலை, இரட்டைநிலை, கிறிஸ்தவ வாழ்க்கை உருவானது.
10.3 சபை நிர்வாக அமைப்பாக மாறியது
இதே நேரத்தில், சபை உயிருள்ள சமுதாயமாக இல்லாமல், ஒரு நிர்வாக அமைப்பாக மாறத் தொடங்கியது. மக்களின் எழுத்தறிவு குறைந்ததால், வேதாகமம் மக்களிடமிருந்து மெல்ல விலகியது. சத்தியங்கள் மறைந்து, மூடநம்பிக்கைகள் வளர்ந்தன.
10.4 வெளியே சென்ற துறவிகள்
ஆனால், எல்லா மடங்களும் இவ்வாறு சிதைந்தனவென்று கூற முடியாது. சில துறவிகள் வெளியே சென்று மக்களிடையே நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். மக்களின் தேவைகளைப் பார்த்தார்கள். உண்மையில், அந்தக் காலத்தில் நற்செய்தியை அறிவிப்பதில் துறவற மடங்கள் முன்னணியில் இருந்தன. விசிகோத்துகள் 400இல், ஐரிஷ் மக்கள் 435இல், ஃபிராங்குகள் 496இல், ஸ்காட்கள் 563இல், ஆங்கிலோசாக்சன்கள் 600இல், கோத்துகள் 720இல் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். துறவிகளே இவர்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவித்தார்கள்.
10.5 மடங்கள் – பயனுள்ள இடங்கள்
துறவற இயக்கத்தால் மொத்தத்தில் நன்மையே விளைந்தது. அங்குமிங்கும் தவறுகள் இருந்தாலும், மடங்கள் பயனுள்ளவைகளாக இருந்தன என்பதை மறுக்க முடியாது. தங்களை வெளியுலகத்திலிருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக்கொண்டு மௌன மடங்களுக்குள் வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை, மடத்து வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்வின் உச்சம் எனக் கருதியதும் துறவற இயக்கத்தின் முக்கியமான தவறு என்பது என் கருத்து. அதே நேரத்தில், பல மடாதிபதிகள், துறவிகள், மடங்கள் விசுவாசத்திற்கும், கட்டுப்பாடான வாழ்க்கைக்கும், நற்செய்தி அறிவிப்பதற்கு அழகான சாட்சிகளாக வாழ்ந்தார்கள்.
11. துறவறம் - நடைமுறைப் பயன்பாடுகள்
11. 1. அர்ப்பணமும் ஒழுங்கும் தேவனுக்காக வாழும் வாழ்க்கையின் அடித்தளம்
சரி, துறவறம், துறவிகள், துறவற மடங்கள் என்ற இந்தப் பாகத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? பொதுவாக நான் வரலாற்றைச் சொல்லிவிட்டு விலகிவிடுவேன். ஆனால், வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்ட நான் சிலவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தொடர்ந்து சிந்தியுங்கள்.
முதலாவது, பெனடிக்ட்டின் மடத்தில் காணப்பட்ட ஒழுங்கும், அர்ப்பணமும் நிறைந்த வாழ்க்கைதான் வாழ்வின் அடித்தளம் என்றும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு வழி என்றும் உணர்த்துகிறது. நாம் என்ன செய்யலாம்? நம் குடும்பத்திலும், சபையிலும், ஓர் எளிய ஆவிக்குரிய ஒழுங்குமுறையைப் பின்பற்றலாம். கூட்டு ஜெபம், ஒருமித்த ஆராதனை, பணிவிடை, நேரக் கட்டுப்பாடுபோன்ற ஒழுங்குகள் நிச்சயமாக ஆவிக்குரிய ஒளியை உருவாக்கும்.
11. 2 தனிமையில் தேவனை நோக்கி – உள்நோக்கிய வாழ்க்கை
இரண்டாவது, துறவிகள் பாலைவனத்தில் தனித்து வாழ்ந்ததற்கும், மடத்தில் அமைதியாக வாழ்ந்ததற்கும் அடிப்படை நோக்கம் என்ன? தேவனோடு ஆழமான உறவு வேண்டும். நாம் என்ன செய்யலாம்? ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது தனித்திருந்து ஜெபிக்கவும், தியானிக்கவும் நேரம் ஒதுக்குகிறேனா? சமூகத்தின் நடுவில் வாழ்ந்தாலும், உள்ளத்தால் தனித்திருக்கிறேனா? மாத்ரோனாவின் வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். “மக்களின் நடுவே வாழ்ந்தாலும் உள்ளத்தால் தனிமையாய் வாழ்வதே மேலானது.” துறவிகள் மனதை வெளி உலக சத்தங்களிலிருந்து விலக்கி, தேவனின் சத்தத்திற்குத் திறந்தவர்களாய் இருந்தார்கள். நான் இன்றைய துரித வாழ்க்கையில், தேவனோடு தனிமையில் இருக்க நேரம் ஒதுக்குகிறேனா?
11.3 வேதாகமத்தில் வேரூன்றுதல்
மூன்றாவது, மடங்கள் கல்வியின் கோட்டைகளாக இருந்தன. அவர்கள் வேதாகமத்தை வாசித்தார்கள், சுவாசித்தார்கள், விசுவாசித்தார்கள். நான் என்ன செய்யலாம்? ஒவ்வொரு நாளும் ஒரு வசனத்தையாவது மனப்பாடம் செய்யலாம்.. சபைகளில், குடும்பங்களில் வேதாகமத்தை விரிவாக வாசிக்கவும், ஆழ்ந்து தியானிக்கவும் பழகலாம்.
11.4 சுயமறுப்பும் சுயகட்டுப்பாடும் ஒரு பாக்கியம்
நான்காவது, துறவிகளுடைய வாழ்க்கையின்மூலம் ஓர் உண்மை நமக்கு உணர்த்தப்படுகிறது: சுயமறுப்பு என்பது வலிமையின் அடையாளம்! தன்னலம் மேலோங்கியிருக்கும் இந்தக் காலத்தில், தன்னலமற்ற வாழ்வை வளர்த்தெடுக்க முயல வேண்டும். சுய விருப்பங்களை ஒதுக்கி, பிறருக்காக வாழப் பழக வேண்டும். ஜெரோம், ஒரிஜன், ஆன்றனி போன்றோரின் கடுமையான துறவற வாழ்க்கை நமக்குச் சவால்விடுகிறது. ஒவ்வொரு சகோதரனும் ஒத்த ஒழுக்கத்தில் வாழ வேண்டும் என்று பெனடிக்ட் வலியுறுத்தினார். நான் தேவனுக்காக வாழும்போது, சுயஒழுங்கு, கீழ்ப்படிதல், பொறுப்பு ஆகியவைகளை எவ்வளவு பரிசுத்தமாகக் கடைப்பிடிக்கிறேன்? என் வாழ்க்கையின் எந்தப் பகுதியில் ஒழுங்கற்ற நிலை இருக்கிறது?
11.5 சபை என்பது நிர்வாகம் அல்ல – சமூக வாழ்க்கை!
ஐந்தாவது, சில மடங்கள் உயிரற்ற நிர்வாகங்களாக மாறின – இது எச்சரிக்கை. சபை என்பது ஓர் அமைப்பல்ல. அது சிலுவையில் அறையப்பட்ட, அர்ப்பணித்த நபர்களின் சமுதாயம்! சபையையும், விசுவாச சமூகத்தையும் ஓர் உறவுப் பிணைப்பாக மாற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் சாட்சியாக, ஆதரவாக, வாழ வேண்டும். சபை என்பது நிர்வாகம் அல்ல – சமூக வாழ்க்கை!
11.6 சுமைகளைத் தவிர்க்க வேண்டாம் – சுமையைச் சுமக்கக் கிருபை.
அந்த இளம் துறவியின் வார்த்தை நம்மை உலுக்குகிறது. “இச்சை எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் அது என்னை ஆளாக்குகிறது.” பிரச்சினைகள் நீங்கவேண்டும் என்று ஜெபிக்காமல், அவைகளைத் தாங்கும் ஆற்றலை, கிருபையை, கேட்க வேண்டும். அதுவே நம்மை ஆளாக்கும் வாயிலாக அமையக்கூடும்.
11.7 நற்செய்தியால் உலகத்தை மாற்றுவது
மடத்திற்குள் அடைந்து வாழாமல், பல துறவிகள் ஐரோப்பாவை நற்செய்தியால் மாற்றினார்கள். நான் என்ன செய்கிறேன்? இயேசுவின் நற்செய்தியைக் கொண்டுசெல்ல முயற்சி செய்கிறேனா? தொடர்ந்து வெளியே சென்று மற்றவர்களுக்காக ஜெபிப்பது, சாட்சியாக இருப்பது, என் வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத பகுதியா?
துறவற வரலாறு நம்மை ஒரு உள்நோக்கிய ஆவிக்குரிய பயணத்துக்குள் அழைக்கிறது. மௌனம், ஒழுங்கு, தியானம், சேவை, சுயமறுப்பு — இவை யாவும் இன்று இளந்தலைமுறைக்கும் தேவையான கிறிஸ்தவ மரபுகளாக இருக்கின்றன.
12. முடிவுரை
12.1 துறவற வாழ்க்கையின் இரண்டு தோற்றங்கள்
மொத்தத்தில் பார்த்தால், தனியறைத் துறவற வாழ்க்கை (மொனாஸ்டிசிசம்) வரலாற்றில் நன்மையை விளைவித்தது. "எல்லா நேரமும் நல்லதா?" என்று கேட்டால், "இல்லை" என்பதுதான் என் பதில். சில நேரங்களில் அது தவறான பாதைக்கு மாறியது, வீழ்ச்சியும் அடைந்தது. ஆனாலும், துறவற வாழ்க்கை பல வழிகளில் பயனுள்ளதாகவே இருந்தது.
12.2 சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கும் துறவறம்
இதன் பொருள் என்ன? துறவற வாழ்க்கை சபையின் சீர்திருத்த இயக்கங்களை அரவணைத்துக்கொள்வதற்கான ஒரு வழியாக இருந்தது. ஒரு புரட்சிகரமான சீர்திருத்தவாதி எழும்பினால் - எடுத்துக்காட்டாக நாம் பின்னாட்களில் விரிவாகப் பார்க்கப்போகிற பிரான்சிஸ் அசிசியார்போல —அவர் ஒரு புதிய துறவற சபையின் தலைவர் - பலர் அவரைப்பின்பற்ற அந்தத் துறவற சபையில் சேர்ந்துவிடுவார்கள். இதனால் அந்தப் புதிய இயக்கம் சபைக்கு வெளியே போய் பிரிவினையை ஏற்படுத்துவதற்குப்பதிலாக, சபைக்குள்ளேயே முடங்கிவிடும். உரோமன் கத்தோலிக்க சபை இப்படித்தான் சீர்திருத்த இயக்கங்களைத் தன் கட்டமைப்புக்குள்ளேயே வைத்துக்கொண்டது. எழும்பிய சீர்திருத்தவாதி முழுச் சபையையும் சீர்திருத்துவதற்கு உரோமன் கத்தோலிக்க சபை இடம்கொடுக்கவில்லை. அவர் விரும்பிய சீர்திருத்தத்தை அவர் ஏற்படுத்திய மடத்துக்குள் மட்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் அவரை மடக்கிவிட்டார்கள். எனவே, அவரால் குறைந்த தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தமுடிந்தது.
12.3 இரண்டும் உண்மை: உயரமும் வீழ்ச்சியும்
இந்தப் பாகத்தைச் சுருங்கக் கூறின், நான் இப்படிச் சொல்வேன். துறவறமடங்கள் பல வழிகளில் நன்மை தருவனவாக இருந்தன. மேற்கத்திய நாகரிகம், கலாச்சாரம், ஒழுங்கு, எழுத்தறிவு - இவை எல்லாம் இந்தத் துறவற மடங்களில் தொடர்ந்தன. அதே நேரத்தில் சில நேரங்களில் சில துறவற மடங்கள் தவறான பாதையில் சென்றன. ஆனாலும் அவை பல வகைகளில் பயனுள்ளவைகளாக இருந்தன. சபைக்குள்ளே தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு துறவற மடங்கள் ஒரு பயனுள்ள வழியாக இருந்தன.
12.4 தொடரும் பயணம்
இது 312ஆம் ஆண்டிலிருந்து 1000ஆம் ஆண்டுவரை, கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட துறவற வாழ்க்கையைப்பற்றிய ஒரு சுருக்கமான பார்வை. இந்த அம்சங்களைப்பற்றி நாம் பிறகு இன்னும் அதிகமாகப் பேசுவோம். ஏனெனில் நாம் எதிர்காலத்தில் பேசப்போகும் முக்கியமான கிறிஸ்தவத் தலைவர்களில் பலர் - தொடக்க காலத்திலும், பிந்தைய காலத்திலும் — துறவிகள், துறவற மடங்களிலிருந்து வந்தவர்கள். இதுவும் துறவற வாழ்க்கையின் ஒரு நல்ல விளைவுதான்.
12.5 இறுதிக் கூறு
இந்தப் பாகம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நீர்நிலைகளில் விழும் ஒரு சிறிய மண்துகள்கூட நீர் அலைகளை உண்டாக்கும், அதன் அலை... அங்குள்ள எல்லாவற்றையும் தொட்டுச்செல்லும். இந்த உரையும், இந்த வரலாறும் உங்கள் உள்ளத்தில் ஒரு சிறு மண்துகள்போல விழுகிறதா? உங்களுடைய எண்ணங்களைச் சொல்லுங்கள். உங்கள் உணர்வுகளைப் பகிருங்கள். ஒரு சொல்லும் காற்றில் கரைந்துவிடாது, ஒவ்வொரு சிந்தனையும் ஓர் அலைவளையத்தை உண்டாக்கும். உங்கள் வார்த்தைகளும் ஓர் அலை. உங்கள் கருத்தும் ஒரு காற்று. உங்களால் ஓர் அலை உருவாகலாம். ஓர் ஊக்கம். ஒரு மறுபரிசீலனை. ஓர் எழுச்சி.உண்டாகலாம். மீண்டும் தொடர்வோம்.